கும்பகோணத்தில் இருக்கும் கோவில்களை பார்க்க
இந்த பயணம். மிக முக்கியமாக பழையாறையை பார்க்கவேண்டும். கும்பகோணத்தில் இருந்து
பட்டிஸ்வரம் சென்று அங்கிருந்து பழையாறையை அடையலாம் என்று சிலர் வழி சொன்னார்கள்.
அப்படியே பயணப்பட்டோம். வழியில் பட்டிஸ்வரம், திருசக்திமுற்றம் கோவிலையும்
பார்த்துவிட்டு பழையாறைக்கு சென்றோம். ஒரு சிறிய வீதி வழியே செல்லும் போது, பெரிய
கோபுரங்கள் எதுவும் கண்ணில் படவில்லை.எனக்கு தெரிந்த “பழையாறை” சரித்திர
புதினங்களில் வரும் ஊர் மட்டுமே! அங்கு மாளிகைகள் இருந்தது, கோவில் ஊரின் நடுவில்
இருந்ததாம். படித்திருந்த எல்லா செய்திகளும், என் கண் முன்னே, தஞ்சைக்கு முன்னே
வளர்ந்திருந்த ஒரு நகரை என் கண் முன்னே கற்பனையில் ஓட விட்டிருந்தது. அந்த
வீதியின் முடிவிற்கு வந்துவிட்டோம். கோவிலை பார்க்க முடியவில்லை. கீழப்பழையாறை
தானே இன்று விசாரித்து முடித்துவிட்டேன். கோவில் எங்கே இருக்கிறது என்று
கேட்டபோது, நாங்கள் வந்த வழியே காண்பித்தார்கள். கடந்து வந்துவிட்டோமா ? பெரிய
கோபுரங்கள் ஏதும் தென்படவில்லையே , வாகனங்கள் எதுமே காணக்கிடைக்கவில்லை!,
மறுபடியும் அந்த சாலையில் பயணித்தோம். வழியில் ஒரு சிதைந்த கோபுரத்தை காண்பித்த
எங்கள் வாகன ஓட்டுனர், இதுவா? என்றார். எத்துணை பெரிய நகரம் பழையாறை? எவ்வளவு
வரலாற்று சிறப்பு மிக்க ஊர், அதன் பழைய கோவில் இப்படியா இருக்கும்? நிச்சயம் இது
இல்லை என்று சொல்லிவிட்டேன். கடந்து சென்ற ஒரு முதியவரிடம், கோவிலை
விசாரிக்கையில், அதுதான் என்றார்.
அதிர்ச்சியின் உச்சியில் இருக்கிறேன், மிக
அதிகமாய் சிதைந்த கோபுரம், கூட்டம் இல்லை , குறைந்த பட்சம், பூசை செய்பவர் கூட
இல்லை, காலை பத்து மணி அளவில், கோவில் பூட்டப்பட்டிருந்தது. கோவில்களில் கூட்டம்
வழியும், குடந்தையில் இப்படி ஒரு கோவிலா? சோமநாதர் திருக்கோவில், கீழப்பழையாறை,
என்று பெயர் பலகை இருந்தது. கோவிலை திறக்க யாராவது இருகிறார்களா, என்று கண்கள்
தேட, ஒரு பெரியவர் வந்து கதவுகளை திறந்தார். எங்க இருந்து வரிங்க?, என்ற
கேள்வியோடு அப்பாவிடம் பேசினார். யாரும் அங்கு பெரிதாய் வருவதில்லை. பக்கத்தில்
இருக்கும் பட்டிஸ்வரம் துர்க்கை கோவிலுக்கு வரும் கூட்டம் இங்கு இல்லை.
உடைந்திருந்த ராஜ கோபுரத்தின் வழியே, அந்த கோவிலை நோக்கி நடக்கிறேன் நான். சிறிதாய் ஒரு நந்தி
மண்டபம், ஒரு மூடிய சன்னதி சோமகமலாம்பிகை , தரைகளில் பதிக்க கற்கள் ஒரு பக்கம் கொட்டி
கிடந்தது.
தரை முழுக்க சிதைக்கப்பட்டிருந்தது. சீர் அமைக்க இருகிறார்கள் என்றார்
கதவை திறந்து விட்டவர். கண் முன்னே இன்னும் ஒரு கோபுரம், இரண்டு கோபுரங்களுக்கு
நடுவே, கோவில் சிதைந்து காணப்பட்டது. காலம் மிகப்பெரிய போர்க்களம் போலும், இங்கு
உயந்தது தாழ்கிறது, அல்லது தாழ்த்தப்படுகிறது. மக்கள் குவிந்து கிடந்த மண்ணில், இப்போது
மக்கள் இல்லை, பொட்டல் காடுகளாய் இருந்த நிலங்களில் மக்கள் வழிகிறார்கள். மாற்றம் இயற்கையின்
எழுதப்படாத விதி போலும்.
ராஜ கோபுரம் கற்களால் கட்டப்பட்டிருந்தாலும்,
மேலே இருந்த பகுதிகள் செங்கற்களால் ஆனவை. கால வெள்ளத்தில், அதன் மேற் சுவரையும்,
சிலைகளும் இழந்து பாதி உடைந்தும் காணப்பட்டது.கட்டிடங்களை காணும் போது , படித்தவை
எல்லாம் நினைவிற்கு வருவது வழக்கமாகி விட்டது. செங்கற்கள், இன்றைக்கும் நாம்
பயன்படுத்தும் கட்டுமான பொருள். ஆனால், பெரும்பாலும் ஒரே அளவான செங்கற்கள் தான்
உபயோகப்படுத்தப்படுகிறது. நமக்கு தேவை என்றால், தனியாக செய்து கொள்ளவும் முடியும்.
ஆனால் அவையும் ஒரு குறிப்பிட்ட மாதரிகளில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்கும்
போது மட்டுமே சாத்தியம். ஆனால், கோபுரத்தில் நான் பார்க்கும் செங்கற்கள்,
ஒவ்வொன்றும் ஒரு அளவு, அந்த உருவத்திற்கு ஏற்ப. அதில் எந்த ஒரு கல்லை மாற்றி
வைத்தாலும் அந்த உருவம் பெற முடியாது. இன்றைக்கு இருப்பது போன்று எந்திரங்கள்
இருந்திருக்காது, ஆனாலும் இது எப்படி சாத்தியம்? செங்கற்கள் செய்முறை பற்றி
படித்திருக்கிறேன். மண்ணை தேர்ந்தெடுத்து, தேவையானவற்றை எடுத்து, சுத்தப்படுத்தி,
கற்கள் நீக்கி , குழைத்து, அதன் அளவீடுகளில் செய்யப்பட சட்டங்களுக்குள் நிரப்பி,
காயவைத்து, பிறகு சுட்டு தயார்செய்வார்கள். இங்கு காய விடும் போதும், சுடும்
போதும் செங்கல் சுருங்கும். அதனால் அதன் இறுதி அளவை கணக்கில் கொண்டு, அது
சுருங்கும் அளவையும் கணக்கில் கொண்டு, சட்டங்கள் செய்திருக்க வேண்டும். இங்கு
ஒவ்வொன்றும் வேறு வேறு அளவு. ஒரு வேறுபட்ட சுவர் கட்டவே இன்றைய நிலையில் குறைந்த
பட்சம் இரண்டு மூன்று படங்கள் தேவைப்படுகின்றது. அதுவும் அடிமட்ட ஊழியருக்கு
தெரிவிக்கப்பட , படங்களை புரிந்துக்கொள்ளும் அறிவும், அதை எளிமைப்படுத்தி புரிய
வைக்கும் அறிவும் கொண்ட ஒருவர் தேவைப்படுகிறார். இங்கு என் கண் முன்னே இருக்கும்
இதை செய்ய, அடிப்படையாக அளவுகள் தேவை, அனுபவம் மிகுந்த கட்டிடகலை வல்லுனர்கள்,
பாறைகளின், செங்கற்களின் தன்மை தெரிந்த வல்லுனர்கள், படம் வரைய தெரிந்தவர்கள், அதை
அடுத்த நிலை உதவியாளருக்கு தெரிவிப்பவர், சிற்பிகளுக்கு தலைமை, செங்கற்கள்
செய்யும் குழு, அவர்களுக்கு தலைமை, இதன் கட்டுமானத்தை செய்யும் குழு. இவர்கள்
அத்துணை பேரின் கூட்டு முயற்சியே இன்று நான் காணும் இந்த கோபுரம். இவர்களில்
பலருக்கு படங்களை படிக்க தெரிந்திருக்க வேண்டும். படங்களை படிப்பது, மிக சுத்தமாக
கட்டிடகலையியல் வார்த்தை. ஒரு கட்டுமானத்தை கோடுகளின் துணை கொண்டு, முழுக்க சொல்லி
விடும் கலை. வரைபவருக்கும், புரிந்துக்கொள்பவருக்கும் இடைப்பட்ட மொழி இங்கு
ஓவியமே. அளவீடுகள், பெயர்கள் சரியாக இருந்தால் வரைந்தவரின் உதவி கூட இல்லாமல்,
புரிந்துக் கொள்ள முடியும்.
இந்த செங்கற்கள் பல நூறு மக்களின் உழைப்பு. அப்படியே
அடுத்த நிலை கோபுரத்தை கடந்து உள்ளே செல்கிறேன். சோமநாதர் சன்னிதி. என்னை தவிர,
இந்த காலத்தை கடந்த கலைக்கோவிலை பார்க்க யாருமே இல்லை இங்கு. மாடக்கோவில் அமைப்பு,
தேர் அமைப்பு, ஒரு பக்கம் குதிரையும், இன்னொரு பக்கம் யானையும் இக்கோவிலை வேறு
இடம் இழுத்துச் செல்ல தயாராய் இருக்கிறது போலும். தாராசுரத்தை
நினைவுப்படுத்துகிறது இதன் அமைப்பு.இதன் அழகில் மயங்கி, இதைப் போல தானும் ஒரு
கோவில் கட்டும் எண்ணம் கொண்டு இரண்டாம் ராஜ ராஜன் தாராசுரத்தில் அக்கோவிலை
எழுப்பியிருக்கலாம். செடிகள் எல்லாம் சுவர்களை ஆக்கிரமித்திருக்கின்றது.
பராமரிப்பு என்ற பெயரில் தரைகளில் எல்லாம் பூங்காகளில் காணப்படும் (டைல்ஸ்) கற்கள், சக்கரம் பாதி மறைக்கப்பட்டு தரை மேடாக
உயர்த்தி இருகிறார்கள். திருப்புள்ளமங்கை, தாராசுரம், கங்கை கொண்ட சோழபுரம்
கோவில்களில் காண கிடக்கும் சிவந்த வண்ணம் சில இடங்களில் பார்க்க முடிகிறது.
சன்னிதி பூட்டி இருந்தது. வெளிலே சுற்றி
பார்த்துவிட்டு கிளம்ப எண்ணம் இல்லை, ஆனாலும் வேறு வழி இல்லை. விமானத்தின் காரை
உடைந்து இருக்கிறது, மேலே ஒரு செடி மரமாக வளர துடிக்கிறது. சுற்று சுவரின்
ஓரங்களில் மணல், பள்ளங்கள் பார்க்கவே வருத்தமாக இருக்கிறது. ஆனால், இதுதான் நிஜம்.
உண்மை.
எது இன்று மேலான இடத்தில் உள்ளதோ, அது ஒருநாள் கீழேயும் வருகிறது. காலம்
அதை தீர்மானிக்கிறது. படிக்கற்களுக்கு கிழே இருக்கும் பகுதியில் அழகாய் சிறிதாய்
நிறைய சிலைகள். அடுக்கடுக்காய் நிலைகள், அத்தனையிலும் வேலைப்பாடுகள். வரலாறு என்ன
சொல்கிறது பழையாறை பற்றி... இதன் சிற்பங்களில் என்ன கதை சொல்கிறது ...

No comments:
Post a Comment