இந்தச் சிற்பத்தை பற்றி, என்ன எழுதுவது?
பாலுச்சாமி ஐயா, இதை பற்றி நானூறு பக்க புத்தகம் வெளியிட்டிருக்கிறார். அதில்
இருந்து, நான் மிக சில கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன்.
மிக அழகிய, அர்ஜுனா/ பகிரதன் தவம் பற்றியது இந்த
சிற்ப தொகுதி . இது யாரை பற்றி, என்பது ஆராய்ச்சியாளர்களின் கண்ணோட்டத்தில் மாறுபடுகிறது.
ஐயாவின் ஆய்வு என்ன என்று கடைசியில் பார்ப்போம். முதலாவதாக, இது ஒரு புடைப்புச்
சிற்பம். இதில் மிக அதிக உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றது. மனிதர்கள்,
மிருகங்கள், கின்னரர்கள், கிம்ருடர்கள், கந்தர்வர்கள், கணங்கள், நாகர்கள் என்று
ஒரு கூட்டமே இருக்கிறது.
தொகுதியின் இடையில், ஒரு ஓடை போன்ற அமைப்பும்,
அது அதன் இரு பக்கங்களின் ஒருங்கிணைப்பு பகுதியாக உள்ளது. வலதுபுறமும் உள்ள
அனைவரும் அந்த நடு நீர் வீழ்ச்சியை நோக்கி வருவது போன்று அமைத்திருக்கின்றனர். அதே
போலவே இடதுபுறமும். பாறையை, இரண்டு நிலையாகப் பிரித்திருக்கின்றனர். இப்போது, இந்த
சிற்பத்தை பார்போம்.
மேல் பகுதியை முதலில் பார்போம்.முதல் வரியில்,
ஒரு சிங்கமும், சில கணங்களும் உள்ளன,அதன் கீழே ஒரு கின்னர தம்பதிகளும், கந்தர்வ
தம்பதிகளும்,சூரியனும் உள்ளனர். சூரியனுக்கு பக்கத்தில், ஒரு மனிதரின் பாதி உருவம்
மட்டும் தெரிகிறது, அவர் பரசுராமர். அதன் கீழே, ஒரு பலாமரம், அருகில் ஒரு
வேடன்,அதன் அருகில், பல மரங்களின் தொகுப்பு, காட்டை உருவகப்படுத்தியுள்ளனர். அதற்கு
பக்கத்தில் ஒரு குரங்கு, பலாப்பழம் கொண்டு செல்லும் வேடன், உடன் இன்னொரு வேடன்,
அவரின் காலுக்கடியில் மான், குட்டிகளுக்கு பால் கொடுக்கும் சிம்மம், பூத கணங்கள்
சூழ சிவபெருமான். அவரை நோக்கி தவம் செய்யும் ஒருவன்( அர்ஜுனன்? பகிரதன்?) இந்த விளக்கத்தை
இறுதியில் பார்ப்போம்.
அப்படியே வலதுபுறம் பார்ப்போம், பல கின்னர தம்பதியர்கள், கிம்ருடர்கள்,
கந்தர்வ தம்பதியர்கள், சிம்மம், கோழி, சந்திரன், முதலானவர்கள் உள்ளனர். கீழ்
தலத்தில், ஒரு யானை கூட்டம், நீர் அருந்தும் காட்சி, ஒரு பூனை தவம் இயற்றும்
காட்சி, இடது புறம், ஒரு சிறிய கோவில் அதன் வெளியே சோகமாக ஒரு பெரியவர், அவர்
முன்னே சில சீடர்கள். ஆற்றில் குளித்து முடித்து பன்னிரண்டு மணிக்கு, சூரியனை
வணங்கும் முறையில் ஒருவர், துணிகளை பிழியும் ஒருவரையும் செதுக்கியுள்ளனர். இப்போது
நடுவில் உள்ள, பிளவை பார்போம், அதில் நாகராஜன், அவன் மனைவி உள்ளனர்.
இதன் கதை என்ன, எதை குறிக்கும் சிற்பம் இது?
கதை ஒன்று – இது பகிரதன் கதை. பகிரதனின்
முன்னோர்கள் ஒரு முனிவரின் சாபத்தால் எரிந்து, சாம்பலாகி விடுகின்றனர். அவர்களின்
சாப விமோசனம் பெற, கங்கை நீரை கொண்டுவர வேண்டும் என்று முனிவர் கூறுகிறார். பல
மன்னர்கள் முயன்றும் முடியாது போகவே, பகிரதன் தன் முன்னோர்களின் சாபம் விலக,
கங்கையிடம் பூமிக்கு வருமாறு கேட்கிறான். கங்கையோ, அவளுக்கு சம்மதம் என்றும், சிவபெருமானை நோக்கி தவம் செய்து மட்டுமே அவளை
பூமிக்கு அழைக்க முடியும் என்று கூறுகிறாள். அவனும் பல காலம் தவம் இயற்றி
சிவபெருமானின் தரிசனம் பெறுகிறான்.
இப்போது, சிற்பத்தை பாருங்கள், பகிரதன் அருகில்,
சிவன் பூதகணங்களோடு, வந்து, அவன் கேட்ட வரத்தை அருள்கிறார். கங்கை பூமிக்கு
வருகிறாள். அதுதான் அந்த நடு பிளவு, அதில் நாக குடும்பங்களும் வருகின்றன. மக்கள்
நீராடி, சூரிய பூஜை செய்கின்றனர். மிருகங்கள் நீராடி மகிழ்கின்றன. பகிரதனின்
முன்னோர் சாபமும் தீர்கின்றது. இந்த நிகழ்வை பார்க்க, தேவர்கள், கந்தர்வர்கள்,
கின்னரர்கள், கிம்ருடர்கள், மிருகங்கள் எல்லாம் வருகின்றன.
இரண்டாம் கதை – ஐயா , அவர்களின் புத்தகத்தில்
இருந்து.
இதில், தவம் இயற்றும் ஒருவர், சிவன், முனிவர்கள்
இவர்களை தவிர வேறு யாரையும் மைய்யப்படுத்தாமல், பகிரதனின் கதைச் சொல்லப்படுகிறது.
மற்றவர்கள் எல்லாம் , எதற்காக இந்த சிற்ப தொகுப்பில் இடம்பெறுகிறார்கள்? என்று
ஆய்வு செய்து இந்த நூலை வெளியிட்டிருக்கிறார்கள்.
இங்கு, அர்ஜுனன் தவம் செய்கிறான். பாரதப்போரில்,
வெற்றி பெற பாசுபதாஸ்தரம் சிவனிடம் வாங்குவதற்காக.
சிவன் அவர் கையில் அந்த அஸ்திரத்தை வைத்திருக்கிறார். அவன் இமயமலையில் தவம்
செய்கிறான். கங்கை வழிகிறாள்!அங்கிருக்கும் மிருகங்கள் அனைத்தும், மகாபாரத
கதைப்படி , அர்ஜுனன் தவம் இயற்றும் பகுதியில், இருக்கும் மிருகங்கள்.
கின்னரர்களும், கிம்ருடர்களும், அந்த பகுதியில் இருந்தவர்கள். அங்கு உள்ள
கங்கையில் நீராடுவதும், மிருகங்கள் நீர் அருந்துவதும் சிதரிக்கப்பதுள்ளது. அவன் பாசுபதாஸ்திரத்தை
பெற்றுக்கொள்ளும் போது, பரசுராமர் இமய மலைக்கு மேல இருந்து பார்க்கிறார்.
கீழே உள்ள பூனையின் பின்னணி, துரியோதனன், ஒரு
பூனையின் கதையை தருமருக்கு தூது சொல்லி
அனுப்பினான் . அதாவது, ஒரு பூனை, சாது வேடம் போட்டு, எலிகளை நம்பவைத்து ஏமாற்றியதாம்.
பூனையை, நம்பி எலிகளும் அதை வழிபட தொடங்குகிறது. கொஞ்சம் நாட்கள் கழித்து,
எலிகளின் எண்ணிக்கை குறைய துவங்குகிறது. ஒரு புத்திசாலியான எலி, பூனையின் கழிவை
ஆய்வு செய்து, அதில் எலிகளின் முடிகள் இருப்பதை உறுதி செய்து, மீதம் இருக்கும்
எலிகளை பூனையிடம் இருந்து காப்பாற்றுகிறது. இதில் வரும் பூனையை, போல தான் தருமரும்
என்று தூது சொல்வதாக ஒரு கதை பாரதத்தில் உள்ளது. அதன் சிற்பம் இது.
அடுத்து, அந்த சிறிய கோவில், இதில் உள்ளே,
விஷ்ணு, இறைவனாய் , வெளியில் அமர்ந்து பாடம் சொல்லும் குருவும் விஷ்ணுவே, என்பதாய்
இருக்கிறது.
மேலும், இதில் இருக்கும் குரங்குகளும் இது இமலயத்தை
குறிக்கும் சிற்பம் என்பதற்கு சான்றாய், அங்கு இருக்கும் குரங்குகளின் வடிவில்
உள்ளது.
அந்த யானைகளை, பார்போம் இதில் பத்து யானைகள்
உள்ளன. அனைத்தும் நீர் அருந்த வருபவை. யானைக்கு நான்கு தந்தங்கள் உள்ளது. அதை
அழகாக வெளிப்படுத்தியுள்ளனர். இதுவும், யானைகளின் உடற்கூறுகள் நன்றாக படித்து,
அதன் படி வடிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில பகுதிகள் இதில் முற்று பெறாமல் உள்ளன.
சில கோட்டுருவங்கலாகவும், சில செதுக்கல்கலாகவும் உள்ளன. ஆனால் முழுமை அடையவில்லை
இந்த சிற்பம் வடிப்பதற்கு முன், இதைப் போலவே
சிறியதாய் செய்து பார்த்த சிற்பம், மகிஷாசூரமர்தினி குடைவரைக்கு அருகில் உள்ளது.
நேரில் சென்று பார்த்து வாருங்கள். அர்ஜுனன் தவம்
இயற்றுகையில், இமலயத்தில் இருந்த எல்லா உயிர்களும் பார்தனவாம், நாமும் பார்த்து
வருவோம்.










