Tuesday, 15 March 2016

மல்லை 2

அடுத்ததாக நாங்கள் பார்த்தது புலிக் குகை என்று அழைக்கப்படும் இடம். இதை ஏன் புலிக் குகை, என்று அழைகின்றனர் என்று தெரியவில்லை , என்று ஐயா பாலுச்சாமி கூறினார்கள். அங்கு புலியும் இல்லை, அது குகையும் இல்லை!




சரி , என்னதான் இருக்கிறது இங்கு ? ஒரு பெரிய பாறையை, இரு பாகங்களாய் பிரித்து, ஒரு பக்கம் ஒரு அழகிய சிற்ப தொகுப்பை உருவாக்கி உள்ளனர். மேலே இருந்து பார்ப்போம், நடுவில் ஒரு யாளி, நேரே நம்மை பார்ப்பது போல உள்ளது. அடுத்து அதன் பக்கத்தில், இரண்டு புறமும் இரண்டு யாளிகள், சற்றே சாய்ந்த கோணத்தில் நம்மை பார்க்கின்றன, அடுத்து இரண்டு யாளிகளும் சற்று தலையை உயர்த்தி நடுவில் இருக்கும் யாளியை பார்ப்பது போல, அதை போலவே இன்னும் இரண்டு யாளிகள், கடைசியாக கீழே இருக்கும் யாளிகள் அமைதியாக மண்ணை நோக்கி பார்க்கிறது !

கட்டிட கலையியலில் , எந்த ஒரு படம் வரைந்தாலும் அது சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று உள்ளது! அப்போது தான் அது பார்ப்பதற்கு அழகாக இருக்கும்! இதை எல்லாம் பின்பற்றி இந்த தொகுதி உள்ளது! அப்படியானால், பல்லவர் காலத்தில், சிற்ப தொப்பிற்கு என்று பல விதிகளை வைத்திருந்தர் போலும்! இது ஒரு வகையில், நடுவில் இருக்கும் யாளியை முதன்மைப்படுத்துகிறது! அதன் தன்மையும், அளவும், கம்பீரமும் அதையே வெளிப்படுத்துகிறது ! அதன் நீண்ட பற்கள், பயத்தை விட அமைதியையே எனக்கு காண்பிப்பதாய் தோன்றுகிறது ! எல்லா யாளிகளுக்கும் கொம்பு உள்ளது ! அனைத்து யாளிகளின் கண்களிலும், பற்களின் அடுக்கிலும் அதன் முகத்தில் ஒரு புன்னகை இருப்பதாய் நினைக்க செய்கிறது! இன்னும் ஒரு விசயமும், இதில் இருக்கிறது, இந்த யாளிகள் அனைத்தும், கண்களை மூடிக்கொண்டு எதையோ ரசிப்பதைப் போலவும் உள்ளது ! இந்த யாளிகளின் வரிசை, ஒரு பூத வரிசை போல, ஹாரம் என்று சொல்லப்படும் பறவைகளை, பூதங்களை கொண்டு அமைக்கப்படும் ஒரு முயற்சியாக இருக்கலாம் என்றார்கள் ஐயா !
அடுத்த நிலையில் ஒரு சிறிய மேடை, இரு பக்கங்களிலும் யாளியின் மீது வீரர்கள் , அடுத்து இரு பக்கங்களிலும் துவார பாலகர்களை வைக்கும் இடம் போல ஒன்று உள்ளது! ஐயா , அவர்களின் கூற்றுப்படி , இது எதற்காக செய்திருக்கிறார்கள் என்பது, தீர்க்கப்படாத விசயமாக இருக்கிறது ! மக்களை சந்திக்க அரசன் வந்து அமரும் மேடை என்று ஒரு சிலரும், கோவில் என்று சிலரும் சொல்கிறார்களாம் , ஆனால் நிச்சயமாக எதற்காக இந்த மேடை என்று சொல்லமுடியவில்லை ! சிவனுக்கான ஒரு கோவிலாய் இருக்கலாம் என்றும், சோமாஸ்கந்தர் சிற்ப தொகுதிக்காகவும் இதை செய்திருக்கலாம் என்று ஐயா கூறினார்கள் !
அதன் கீழே, இரண்டு யாளிகள், சிற்ப வேலை முடியாத நிலையில் ஒரு கையை தூக்கிய, நிலையில் உள்ளது. நடுவில் படிகள் உள்ளது.


அடுத்து, யாளிகளின் வருசைக்கு அடுத்து உள்ள முற்று பெறாத தொகுதி. இரண்டு யானைகளும், ஒரு குதிரையும், நடுவே ஒரு முடிவடையாத தூணும், அதன் இரு புறமும் இரண்டு சிறிய செவ்வகம் , அதன் உள்ளே இரண்டு சிலைகள் உள்ளது. யார் என்று அறிய முடியாத அளவிற்கு சிதைந்து உள்ளது. இது என்ன? எதை குறிக்கிறது ? ஐயாவின் கூற்று, இரண்டு யானையையும், ஐராவதம் என்று கொள்கிறோம், சுப்பிரமணியன், இந்திரன் இவர்கள் இருவரின் வாகனங்களுமே யானை தான். மேலே, இருக்கும் அடையாளம் காண முடியாத சிற்பங்கள், இந்திரனாகவும், சுப்பிரமணியராகவும் இருக்கலாம்.
அப்படியே, நடந்து முன் நோக்கி வந்தோம், அங்கு ஒரு பெரிய யாளியும் , அதன் வயிற்று பகுதியில் ஒரு சதுரமும் செதுக்கப்பட்டுள்ளன. இது என்ன, வயிற்றில் செதுக்கள் ? பதில், மிக புதிது! எப்படி எல்லாம் யோசனை செய்து, சிற்பங்களை வடித்திருகின்றனர் ? அதாவது , இங்கு மகிஷாசுர மர்த்தினியின், வாகனமான சிம்மமே, கோவில் ! அதன் நடுவே, வயிற்றில் தேவிக்கென ஒரு கருவறை, அவள் சிலை ! வாகனமே கோவில்! இதை எப்படி கூற முடிந்தது? கடற்கரை கோவிலில் இதை போலவே ஒரு சிற்பம் உள்ளது ! முழுமையான சிற்பம் !





என்னவெல்லாம், செய்ய முடிந்திருக்கிறது? எத்துணை சிந்தனை, எவ்வளவு முன்னேறிய நிலை! நாம் இதை எல்லாம் தெரிந்து கூட பார்ப்பதில்லை !மல்லை, தொடரும் !! 


No comments:

Post a Comment