Sunday, 26 July 2015

கங்கை கொண்ட சோழபுரம் - 2

என் முதல் பயணம், கங்கை கொண்டசோழபுரத்தை பற்றிய எந்த தகவலும் தெரிந்து கொள்ளாத போது நடந்தது. அதை பற்றி நிறைய தெரிந்து கொண்டு  மீண்டும் கங்கை கொண்ட சோழபுரம். விட்டுப்போன எல்லாவற்றையும் பார்க்கவேண்டும். நண்பரின் மூலம் விமானத்தின் உட்பகுதியை பார்க்கவும் அனுமதி பெற்றுக்கொண்டேன். மாளிகை மேடு, ராஜேந்திர  சோழன் அருங்காட்சியகம் எல்லாம் காண வேண்டும். மிக அதிக எதிர்பார்ப்புடன் என் பயணம் ஆரம்பித்தது. இந்த முறை சில சரித்திர கதைகளில் இருந்து கங்கையின் அழகை வரிகளில் படித்து படித்து, நெஞ்சில் நிறுத்தியே இருக்கிறேன். ஒரே கல்லால் ஆன நவக்கிரக சிலை, பிக்சாண்டார் மூர்த்தி, வாணி, சண்டேஷ்வர அணுகிரக மூர்த்தி, விமானத்தின் உட்கூடு, திருசுற்று மாளிகை, வைக்கப்பட்டுள்ள சிலைகள், சாந்தார அறை என்று பலவற்றை பற்றி அறிந்துக்கொண்டு காணவே செல்கிறேன். அம்மாவும் அப்பாவும் என்னோடு இனிமையாய் ஒரு புதிய கதையை, வரலாற்றை அவர்களோடு நான் பகிர்ந்து கொள்ளப் போகிறேன் என்ற எண்ணத்தோடு பயணிக்கிறார்கள். அதிகாலை முதலே நான் அந்த நிகழ்விற்க்காய் காத்திருக்கிறேன். ராஜேந்திரன் நின்ற இடத்தில் எல்லாம் நான் நிற்கப் போகிறேன். காற்றோடு கலந்த, அந்த மாமன்னனின் கனவு கோட்டையில் உட்புகுந்து அதன் அழகில் என்னை தொலைக்கப் போகிறேன். இந்த மகிழ்ச்சி என்னை பதற்றம் கொள்ள செய்தது. மிக நீண்டு கிடந்த என் கனவுகளுக்கு இடையே, நிகழ்காலம் ஆமையாய் நகர்ந்தது. மீண்டும் அந்த உடைந்த ராஜகோபுரம், இந்த முறை எனக்கு அதன் வரலாறு தெரியும். உடைந்ததன் காரணம்  தெரியும். ஆங்கிலேயர் காலத்தில், அருகில் இருந்த ஆற்றில் வெள்ளம் வருவதை தடுக்க, ராஜகோபுரம் தகர்க்கப் பட்டு அணை கட்டப்பட்டுள்ளது. இப்போது இருக்கும் அடித்தளம், இந்திய தொல்லியல் துறையால் சீர் செய்யப்பட்டுள்ளது.

அதை தாண்டி உள்ளே சென்று அந்த அழகிய சுதை நந்தியை பார்த்து வியந்து, அதன் அழகில் மயங்கி எத்துணை பெரிய நந்தி?அதன் ஆபரணங்கள் , மணிகள் எல்லாம் மிக அழகாய் செதுக்கப்பட்டிருந்தது .

உள்ளே மகா மண்டபம், நாயக்கர் கால திருப்பணி. ஒரே கல்லால் ஆன, ராஜேந்திரனின் கங்கை வெற்றியை குறிக்கும் நவக்கிரக சிலை. ஒரே ஒரு சிலையாய்  மட்டுமா கொண்டு வந்தான் ராஜேந்திரன்? தெரிந்துக்கொள்ள வேண்டும். இறைவனை தரிசித்துத் விட்டு, எனக்கு விமானத்தின் அழகை காண அழைத்து செல்ல போகிறவருக்காக நான் காத்திருந்தேன். கட்டிடக் கலை நிபுணர் அல்லவா, அதனால் ஆர்வம் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது. அந்த நிமிடமும் வந்தது. மகாமண்டபத்தின், ஓரத்தில் சுவற்றில் ஒரு சிறிய வரிசை படிக்கட்டுகள். இரண்டு அடிக்குள்ளாகவே அதன் நீளம் இருக்கும். அதில் ஏறி சென்றார், எனக்கு உயரம் என்றால் மிகவும் பயம், ஆனால் ஆசை யாரை விட்டது? ராஜேந்திரன்! விமானம்! பார்த்தே ஆக வேண்டும். அதிக பயத்தோடு, கூடவே ஆசையும் கொண்டு ஏறினேன். இப்போது இருப்பதுபோல் பத்து அடி இல்லை, ஒரு தளம். இருப்பது அடிக்கும் மேல் இருந்தது. அம்மாவும், அப்பாவும் கூட. முதல் தளம் சென்றதும், அருகில் இருப்பவர் கூட தெரியாத அளவிற்கு இருட்டு.



இறைவனின் லிங்க திருமேனிக்கு மேலே ஒரு சிறிய சதுர அளவிலான வெட்டு. மேல் இருந்து இறைவனின் லிங்கத்தை காண முடியும். வரைபபடங்களில், "ப்ளான்" என்று சொல்வார்கள், அதை போன்று இருந்தது. மிக சிலிர்பாய். ராஜேந்திரன் இப்படி நிச்சயம்  பார்த்திருப்பான். இங்கு, இதை போலவே குனிந்து.

அங்கு இருந்த சுவர்களின் அகலம் ஒரு மீட்டருக்கும் மேல். இரண்டு சுவர்கள் இருந்தது. இரண்டும் இணைந்து விமானத்தை தாங்கின. அதை போலவே மீண்டும் ஒரு முறை படிகள் ஏறி , அடுத்த தளத்தை அடைந்தோம். அங்கு தான் நான் காண நினைத்தது இருந்தது. ஆம், விமானத்தின் உட்கூடு. நிச்சயம் அருகில் இருப்பவரை கூட காண முடியவில்லை. எண்கோணத்தின் வடிவில் ஆரம்பித்து, வட்டமாய் முடிந்தது அந்த விமானம்.அதன் அழகையும் சிறப்பையும் சொல்ல வார்த்தைகள் இல்லை. மேலும் அதன் கட்டுமானம் பற்றிி அறிந்து கொள்ள நினைத்தேன். எப்படி இது சாத்தியம்? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்? இன்றைய சீரிய அறிவியல் கட்டுமான சாதனங்களால் கூட இப்படி ஒன்றை கட்ட முடியுமா என்று தெரியவில்லை. பார்த்து விட்டு, கீழ் இறங்க மனமும் வரவில்லை, பயமும் குறையவில்லை. பக்க சுவர்களை பிடித்துக்கொண்டு மிக மெதுவாய் இறங்க துவங்கினேன். அடுத்து சாந்தார அறை, அரச குடும்பங்களின் பிரத்தியேக பயன்பாட்டிற்காய் . அதன் சுவர்களில், தஞ்சையில் உள்ளது போன்று ஓவியங்கள் இருக்கும் என்று எண்ணினேன். ஆனால் இல்லை. ஆனால் மிக அழகிய கட்டுமானம். எல்லா சந்நிதிகளையும் பார்த்து விட்டு, அடுத்து அருங்காட்சியம் சென்றோம். முழுக்க சோழர்களின் கலையும் , ராஜேந்திரனின் பெருமையும் பற்றியது.

அடுத்து என் தேடல், தொல்லியல் துறையின் கீழ் அகழ்வு செய்யப்பட்டு இருக்கும், சோழர்களின் அரண்மனை. நீண்ட தேடல்களுக்கு பிறகு, அதையும் கண்டு பிடித்தேன். ஒரு வயல் காட்டின் நடுவே, ஒரு அடித் தளம் இருந்தது. மேலும் அங்கு கிடைத்த சில சிற்பங்களை ஒரு சிறிய மேடையில் வைத்திருந்தனர். விபரங்கள் ஏதும் தெரியவில்லை. மிகுந்த நிறைவுடன் முடிந்தது என் இரண்டாம் பயணம்....






இதிலும் நான் சிலவற்றை பார்க்கவில்லை என்பது, சில வருடங்கள் கழித்து தெரிந்தது. அந்த பயணத்தை மிகுத்த ஆவலோடு எதிர்பார்க்கிறேன். அது செங்கமேடு என்னும் இடத்தில், ராஜேந்திரன் போரில் வென்று கொண்டு வந்த சிற்பங்களுக்காக ........ 

கங்கை கொண்ட சோழபுரம் - 1


பல பயணங்களில் என்னை ஏங்க வைத்த ஊர் இது. என்னவோ இங்கு போகவே முடியவில்லை. தஞ்சை, கும்பகோணம் செல்லும் ஒவ்வொரு முறையும் நினைப்பேன், கங்கை கொண்ட சோழபுரம் செல்ல வேண்டும் என்று. ராஜேந்திர சோழரின் தலைநகரம், நான் படித்த எந்த புத்தகமும் இந்த ஊரை பற்றி பேசவில்லை. ஆனால்,ராஜராஜரின் மகன்,ராஜேந்திர சோழர், அவர் நிர்மாணித்த தலைநகர், பெரிய கோவிலை போன்று இன்னொரு கோவில், என்ன விதத்தில் இது மாறுபட்டிருக்கும்? எந்த விதத்தில் இதன் பிரமாண்டம் இருக்கபோகிறது? புகைப்படங்கள் இதை எல்லாம் சொல்கிறதுதான் ஆனாலும் நிறைவு இல்லை.



மிக நீண்ட பயணத்தின் இறுதியில், வழியில் ஒரு கோவில் இருக்கிறது என்று கேள்விப்பட்டு சென்றோம்,  கங்கை கொண்ட சோழபுரம்.
ஒரு தெருவின் திருப்பத்தில் மிக அழகான ஒரு கோபுரம் காணக்கிடைத்தது, ராஜகோபுரம் இல்லை. நெருங்க நெருங்க பதற்றம் அதிகமானது, என் நெடுநாள் கனவு இது. நான் இந்த பிரமாண்டமான கோவிலை தரிசிக்க போகிறேன். ராஜேந்திரர் பார்த்த கோவில், அவர் நடந்த மண்ணில், அவரின் தலை நகரில்..... எண்ணக்குவியலாய் நான் ! வாகனத்தில் இருந்து இறங்கி, ஒரு வேலிக்கு பின்னால் இருந்து இரண்டு கல்லுக்கு நடுவே அழகான கோவில் தெரிகிறது. 

தஞ்சையின் தெருக்கள், கடை வீதி, மக்கள் கூட்டம் எதுவும் இங்கு இல்லை. ஒன்றை கட்டிடமாய், காலத்தின் சின்னமாய் நான் மட்டுமே எஞ்சி இருக்கிறேன் என்று, ராஜேந்திரரின் வெற்றியின் சாட்சியாய் இந்த கோவில் மட்டுமே. மெல்ல நடந்து இந்த மொத்த சூழலையும் தேக்கிகொள்கிறேன் என்னுள். இது தலை நகரா? எச்சங்கள் என்று என்ன இருக்கிறது இங்கு, கோவிலை சுற்றி ஒரே புதர் குவியல், சில முதியவர்கள், வேறு ஒன்றுமில்லை. வேலிக்கும், நுழைவாயலுக்கும் இடைப்பட்ட இடத்தில் இருந்து விமானம் தெரிகிறது, அதன் முன் மிக பெரிய நந்தி, கொஞ்சம் சீரமைக்கப்பட்ட ராஜ கோபுரம், நான் !

அழகான மாலை பொழுது, கோவில் நடை திறக்கவில்லை என்று வெளியே சொன்னார்கள். இரண்டு கற்களில் துவார பாலகர்களின் சிலைகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது, ராஜகோபுரம் முன்பு. பசுமை படர்ந்த பூமிக்கு நடுவே, கலை மலை ஒன்று நிமிர்ந்து நிற்கிறது, அனுமதி என்னிடம் பெற்று உள்ளே போ, என்பதாய் அதன் முன்னே ஒரு நந்தி. புல்தரை, இல்லாது இந்த இடம் எப்படி இருக்கும், சிந்தனைகள் வருகிறது, ஒரே வண்ணத்தில், மண்ணும், விண்ணை முட்டும் விமானமும் என்று, ஓங்கி இருந்திருக்கும் கங்கை கொண்டசோழபுரம். தலையை நிமிர்த்தி பார்க்க வைக்கும் அழகு. யாரும் இல்லை அங்கு. என்னோடு வந்தவர்களையும் நான் மறந்தே போனேன். ஒவ்வொரு கல்லும் பேசுகிறது. என்னை நினைவிருக்கிறதா ? இங்கு வந்திருக்கிறாயா முன்பு? பல நூற்றாண்டுகளாய் இங்கு நாங்கள் தனித்து இருக்கிறோம். ராஜேந்திரனின் வெற்றியை முழங்கிக்கொண்டு. அதோ அந்த நந்தி, இந்த துவரபாலகர், சிதைந்த ராஜா கோபுரம், விண்ணை முட்டும்விமானம் என்று யாரும் இல்லாத இந்த மண்ணில், எங்களின் ராஜனின் நினைவுகளை காற்றோடு பேசிக்கொண்டு இருக்கிறோம்.   கோவில் நான்கு மணிக்கே திறப்பார்களாம். சுற்றி வருவோம் என்று தஞ்சையையும், கங்கையையும் ஒப்பீடு செய்தது மனம். நந்தி ராஜேந்திரன் காலத்தில் செய்தது. 




திருசுற்று மாளிகை உடைந்திருக்கிறது. அங்கு சென்று கோவிலின் முழு அழகையும் ரசித்துக்கொண்டு இருந்தேன். ஒரு ஓரத்தில், வட்டமான ஒரு சுவர். கோவிலில் எதற்கு இது? கோட்டைகளில் காவல் செய்பவன் நிற்கும் இடம், பாதுகாப்பு கருதி. கோவிலில் எதற்கு? எம் மன்னன், போர் செய்பவன். அவன் எண்ணம் எல்லாம் போர். பாதுகாப்பு, கோவிலும் அதன் அமைப்பும் கூட அவன் குணம் காட்டுகிறது. 

யார் சிதைத்தார்கள், இந்த அழகிய ராஜகோபுரத்தை, திருசுற்று மாளிகையை, ஒரு சந்நிதியை? தெரியவில்லை. படிக்க வேண்டும் என்று தோன்றியது. தஞ்சையும், கங்கையும் மாறுபட்டு தான் உள்ளது. ஒரு சிற்பியின் முதல் படைப்பு தஞ்சை, அவனுடைய பக்குவப்பட்ட படைப்பு கங்கை. அதன் அழகும், சிறப்பும் அதைத்தான் கட்டியது. இழைத்து, இழைத்து சிறப்பு கூட்டி இருக்கிறார்கள். இங்கு வந்து நிற்கும் ஒவ்வொரு உயிரையும் ஆச்சிரியப்பட வைக்க. கணபதி,அம்மன் சந்நிதி, துர்கை, சிம்ம கிணறு, நந்தி, அலுவலகமாக மற்றப்பட்ட மண்டபம் என்று நிறைந்து  கிடக்கிறது கோவில். 

 வரலாறு பேசி வரலாறு பேசி, நேரம் கரைத்தோம். ஒரு வழியாக என் இறைவனை தரிசிக்கும் நேரம் வந்தது. நந்தியை கடந்து துவாரபாலகரை கடந்து கரைந்து போன இருட்டில், ஒளியாய் எம் இறைவனை, ராஜேந்திரன் கட்டிய கோவிலின் தலைவரை, மனம் நிறைய கண்ணோடு விழுங்கிக்கொண்டு இருக்கிறேன். அர்த்தமண்டபம் , மஹா மண்டபம் என்று கடந்து அந்தராளத்தில் இன்று இறைவனை தரிசிக்க வேண்டும்.

இருட்டிலும் நம்மை வழி நடத்தும் இறைவனை, தஞ்சையில் இருந்தவரை விட இவர் என்ன மாறுபாடு கொண்டுள்ளார் என்ற எண்ணம் நினைவில் இருந்தது. பக்தியும், வரலாறும் மாறி மாறி நெஞ்சம் நிறைத்தது. அத்துணை பெரிய சிலை. நாம் முன்பே தஞ்சையை பார்த்தி இருப்பதால், கொஞ்சம் பிரம்மாண்டம் குறைந்தே இருக்கிறது மனத்தில். கூட்டம், நெரிசல், சத்தம் எதுவும் இல்லை. மிக ரம்யமான தரிசனம். எவ்வளவு பெரிய தலைவருக்கு, பூக்கள் எப்படி கிடைக்கிறது ? பூஜைகள் எப்படி செய்யப்படுகிறது? என்று நிறைய கேள்விகள்!




கோவிலை சுற்றி வர வேண்டி படியில் இறங்கினோம். இறங்க முடியாதவாறு,  சிற்பங்கள் என்னை நிறுத்தின. மிக அழகிய விமானம், பலர் இதை பெண்ணின் நளினம் என்று கூறுகின்றனர். காரணம் என்னவென்று சொல்வதில்லை. என் வரையில், பெரிய கோவில், விமானம் சதுரமாக ஆரம்பித்து, சதுரமாகவே முடிகிறது. கங்கையிலோ, எண்கோணத்தில் ஆரம்பித்து வட்டமாக முடிகிறது. இந்த முறை, மிக அழகிய விமான வடிவத்தை வெளிப்புறம் அமைகிறது. உள்ளே இருந்து இதை பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. நிச்சயம் ராஜேந்திரனும், ஈசனும் நடத்திவைப்பார்கள். பின்புறம் திருசுற்று மாளிகை மிக அதிகமாய் சிதைந்து உள்ளது. கணபதி சந்நிதி பார்த்து, அம்மன் சந்நிதிக்குள் வந்தபோது , யாரோ மண்டபத்தில் உடைத்துக்கொண்டு இருந்தனர். எதற்கு என்று தெரியவில்லை. மண்டபத்தின் சுவர்களில் அழகிய ஓவியங்கள் இருந்தது. துவார பாலகரின் மேலும்  சில வண்ணங்கள் காண கிடைக்கிறது.


 சண்டேசுவரர் சந்நிதியும், துர்கையும், சிம்ம கிணறும் பார்த்து நந்தியோடு கதை பேசி வரலாறு தெரியாது! இங்கு பார்க்க வேண்டிய சிற்பங்கள் தெரியாது!   என் கங்கையின் முதல் பயணம் முடிந்தது.


வீட்டிற்கு வந்ததும்,எனக்கு பெரிய அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. அது, பல அறிய, அழகிய விசயங்களை நான் காண தவறிவிட்டேன். அதற்காய், மீண்டும் ஒரு பயணம் உள்ளது கங்கையை நோக்கி ............ .